Tamilnadu
நடிகை திரிஷா வழக்கு - “நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல” : நடிகர் மன்சூர் அலிகான் மீது நீதிபதி காட்டம்!
தவறான காவல் நிலையத்தை வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்??எதற்காக தற்போது திரும்ப பெறுகிறீர்கள்?? என கேள்வி எழுப்பினார். அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி அல்லி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!