Tamilnadu

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை : தகைசால் தமிழர் சங்கரய்யாவிற்கு பிரியா விடை கொடுத்த தமிழ்நாடு!

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாகத் திங்களன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து சங்கரய்யா மறைவுக்குக் கட்சி தொண்டர்கள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரடியாக வந்து சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் மாலை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு இரவு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், கேரள மாநில அமைச்சர்கள் உட்படப் பலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தி.நகரிலிருந்து சங்கரய்யா அவர்களின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அடையார் பேருந்து நிலையத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விண்ணதிர முழக்கங்களாக எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.

இதையடுத்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.மு.க துணை பொதுச் செய்லாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.க தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். பின்னர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Also Read: 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !