Tamilnadu

“சங்கரய்யாவின் பொதுவாழ்க்கை என்றென்றும் வழிகாட்டும் திறந்த பாட புத்தகம்” - கி.வீரமணி இரங்கல் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஆளுமை நிறைந்த தலைவர்களுள் ஒருவர்தான் என்.சங்கரய்யா (102). இவர் தனது இளம் வயதிலேயே தனது படிப்பை பாதியில் துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர், இதற்காக சுமார் 8 ஆண்டுகள் தனது வாழ்வை சிறையில் கழித்தார்.

ஏழை, எளிய மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இவருக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது கொடுத்து கெளரவித்தது. தனது 95 வயது வரை மக்கள் பிரச்னைக்காக போராட்டக்களத்தில் இருந்த இவர், அதன்பிறகும் குரல் கொடுத்து வந்தார். தொடர்ந்து மக்கள் பிரச்னை, சமூக பிரச்னைக்காக குரல் எழுப்பி வந்த சங்கரய்யாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் 2 நாட்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாச பிரச்னை காரணமாக அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். முதுபெரும் தலைவர் காலமானதைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இணையத்திலும் #சங்கரய்யா, #FreedomFighter என்று ட்ரெண்டாகி வருகிறது. இவரது மறைவு தற்போது இந்திய அரசியலில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :

"முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு அளித்த முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற சிறப்பு விருதினைப் பெற்ற வரும், விடுதலைப் போராட்ட வீரரும், எளிமையும், தியாகமும், கொள்கை உறுதியும் என்றும் அவரது வாழ்க்கையின் பல தனிச் சிறப்பு அம்சங்கள் கொண்டவருமான 102 வயது வாழ்ந்த தோழர் என். சங்கரய்யா அவர்கள் இயற்கையெய்தினார் என்ற செய்தி கேட்டு நாம் மிகவும் கலங்குகிறோம்.

நூறாண்டு கடந்த வாழ்வு என்பது ஓரளவு நமது துன்பத்தைத் துயரத்தைக் குறைக்கும் என்றாலும் அவரது இழப்பு என்பது எளிதில் சமாதானம் அடையக் கூடியதல்ல; ஈடு செய்ய இயலாத பெரும் இழப்பாகும். அவரது பொதுவாழ்க்கை என்பது பொதுத் தொண்டாற்றுபவர்களுக்கு என்றென்றும் வழிகாட்டும் திறந்த பாட புத்தகமாகும்.

அவரது தெளிவும், துணிவு மிகுந்த லட்சிய உறவும், பழகுவதில் பாசத்தோடும், மனிதநேயத்தோடும் எவரிடமும் பழகும் பான்மையாளர் என்பதும் இறுதிவரை என்றும் எடுத்துக்காட்டாகவே நிற்கும் என்பது உறுதி! அவரது லட்சியத் தொண்டு, கொள்கை வாழ்க்கைத் துவக்கம் திராவிடர் கழகத்தின் - சுயமரியாதை இயக்கத்தின் ஈர்ப்பிலிருந்து தொடங்கியது ஒரு வரலாறு.

அவரது மறைவு பொது வாழ்க்கையில் நிரப்பப்பட முடியாத ஒன்று. அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், அவரது குருதிக் குடும்ப உறவுகளுக்கும் மட்டுமல்லாமல் - தமிழ்நாட்டிற்கும், கம்யூனிச உலகிற்கும் பெரும் இழப்பாகும். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வீர வணக்கம்."

Also Read: 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !