Tamilnadu

கனமழை பெய்துவரும் நிலையிலும் தமிழ்நாடு முழுவதும் தடையின்றி மின்சாரம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரியப் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல், வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாகச் சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்திற்கு 10 இலட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்கிட அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் (SLDC) மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம்(SCADA) ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

Also Read: ”உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பேச வேண்டும்” : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!