Tamilnadu

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் ஆளுநர்: கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர் என்.சங்கரய்யா. இவர் தனது இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பைப் பாதியில் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இதனால் 8 ஆண்டுகள் தனது வாழ்வைச் சிறையில் கழித்துள்ளார்.

ஏழை, எளிய மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த இவருக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு 'தகைசால் தமிழர்' விருது கொடுத்து கௌரவித்தது. இதையடுத்து ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் சங்கரய்யாவை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாகக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கக் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கான கோப்புகள் ஆளுநரின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டது. ஆனால் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கும் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்துப் பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்”:பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தல்!