Tamilnadu

முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றிய விவகாரம் : பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது !

இந்தியா முழுவதும், பாஜக ஆளாத மாநில அரசுகளை, உள்ளூரை பாஜகவினர் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவினர், மற்றவர்களை விமர்சிப்பது என்ற பெயரில் ஆபாசமாகவும், இல்லாத பொல்லாத விஷயங்களை போலியாக கூறி வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது. அதில் ஒரு நபர்தான் அமர் பிரசாத் ரெட்டி.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த சூழலில் தற்போது இவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கானத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீட்டு முன் சுமார் 45 அடி உயரமுள்ள பா.ஜ.க கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தைச் சென்னை பெருநகர நகராட்சியினரும், போலீசாரும் அகற்ற கடந்த 21-ம் தேதி முடிவு செய்தனர். அப்போது, பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்களை போலிஸார் பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள். இதனால் போலிஸார் அவர்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற, கொண்டு வந்த JCB இயந்திரத்தைக் கற்களைக் கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்குச் சேதம் விளைவித்ததோடு, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது இவர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அப்போது இதற்காக பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின்போது விளம்பரம் செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றி, பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தை ஒட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சூழலில் தற்போது கோட்டூர்புரம் போலீசார் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை மீண்டும் கைது செய்துள்ளனர். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டியை, நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கோட்டூர்புரம் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

Also Read: வருமான வரித்துறையில் வேலை.. போலி ஆவணம்.. லட்சக்கணக்கில் ஏமாற்றிய பாஜக OBC அணி செயலாளர் கைது !