Tamilnadu

சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தை: குன்றத்தூரில் மீட்ட போலீசார்.. 2 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை !

ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் தம்பதியினர். இவர்கள் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்று இரவு ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இந்த தம்பதியினர் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் திடீரென எழுந்து பார்த்தபோது தங்கள் அருகில் இருந்த குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.

இதனால் பதறிய அந்த தம்பதியினர்ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும், குழந்தை கிடைக்காமல் போனதால், சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் தங்கள் குழந்தை காணாமல் போனது குறித்து அந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவது தெரியவந்தது. பின்னர் ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தனர்.

அப்போது ஆட்டோவில் ஏறியவரை மதுரவாயல் பகுதியில் இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் போலீசார் குழந்தையை மீட்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் குன்றத்தூர் அருகே குழந்தையுடன் மர்ம நபர் சென்று கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடத்தியவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பரபாஸ் மெண்டல், நமீதா ஆகியோர் என்பது தெரியவந்தது. குழந்தையை கடத்திய 2 மணி நேரத்திலேயே துரித விசாரணையின் மூலம் கடத்தப்பட்ட குழந்தையை போலிஸார் மீட்டுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: மோடியின் சமூகம் என்ன?சாதிவாரி கணக்கெடுப்பில் அவரின் பொய் அம்பலப்படும் -JDU மூத்த தலைவர் விமர்சனம் !