Tamilnadu

“TTF வாசன் பைக்கை எரித்துவிடலாம்.. Youtube பக்கத்தை மூடக்கிவிடலாம்” - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

தமிழ்நாட்டில் பிரபல பைக்கராக இருப்பவர் டிடிஃப் வாசன். பைக் ரேஸரான இவர், பைக்கில் ஊர் ஊராக சுற்றுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். தனக்கு என்று தனி யூடியூப் சேனல் தொடங்கி அதில் பல மில்லியன் ரசிகர்களை குவித்தார். இருப்பினும் பைக்கில் அதி வேகமாக ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டுவது போன்ற விவாகரத்துக்கு பல புகார்கள் இவர் மீது உள்ளது.

மேலும் இவர் போலீஸ், பத்திரிகையாளர் என பலரையும் அவமரியாதையாக பேசியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. இந்த சூழலில் கடந்த செப்., 19-ம் தேதி சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு ரூ.35 லட்சம் விலை உயர்ந்த SUZUKI நிறுவனத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது வீலிங் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து இவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர் ஓட்டிவந்த வாகனமும் சுக்கு நூறாக நொறுங்கியது.

பின்னர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு TTF வாசன் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சாலையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலிஸார் TTF வாசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட TTF, ஜாமீன் கோரி தாக்கல் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அப்போது இவருக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தான் ஒரு அப்பாவி என்றும், விபத்து நடந்த போது, சாலையில் கால்நடைகள் சென்றதால் அதன் மீது மோதிவிட கூடாது என்று நினைத்து பைக்கை இயக்கியபோது, சக்கரம் தூக்கி விபத்து ஏற்பட்டதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தால் தனக்கு சிறையில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்றும், எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஜாமீன் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், TTF வாசன் பல லட்சம் மதிப்பிலான பைக் வைத்திருந்ததாகவும், ரூ.3 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உடை அணிந்ததால் மட்டுமே அவர் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர். அதோடு இவரது youtube சேனலில் பின்தொடர்புவர்களில் லட்சக்கணக்கானோர் சிறார்கள் என்றும், இவரைப்பார்த்து அதி வேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுவதும் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கமுடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அவருக்கு சிறையிலே மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறிய நீதிபதி நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதோடு TTF வாசனின் யூட்யூப் பக்கத்தை முடக்கி, அவரது பைக்கை எரித்துவிட்டால் நல்லது என்று கருத்து தெரிவித்தார். TTF வாசனின் ஜாமீன் தள்ளுபடி செய்ததைத்தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Also Read: 148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்களை வழங்கிய முதலமைச்சர்.. அசத்தலான புதிய திட்டம்!