Tamilnadu

மயிலாடுதுறை பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் !

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல் வழக்கமாக இன்றும் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் நேரத்தில் பட்டாசுகளை சிலர் பார்சல் செய்துகொண்டிருந்தபோது, அதில் இருந்த வெடிகள் வெடித்துள்ளது.

பட்டாசு ஆலையில் இருந்து வந்த வெடி சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு குடோனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டுளளதாக கூறப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த பலரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு நிவராண தொகையும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தியில், “மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (4-10-2023) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: வெளியூரில் இருந்து வேலை தேடி வந்த இளைஞர்.. அதிகாலை சாலையை கடக்க முயன்றபோது சோகம்.. பதைபதைக்கும் CCTV !