Tamilnadu

மகளிர் 33% இடஒதுக்கீடு : ‘கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல் உள்ளது..’ - திருச்சி சிவா எம்.பி பேட்டி !

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம் பி வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய நாடாளுமன்ற கட்டத்தில் பழைய சிறப்புகள் இல்லை என்றார்.

இதுகுறித்து பேசிய அவர், "பெரியார் ஈவெரா கல்லூரியில் நாளை நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் வருகை தர வேண்டும். பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தற்பொழுது பயிலும் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். மூன்று வேலையும் உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இது உடனடியாக நடைமுறைக்கு வராது. தேர்தல் நெருங்குவதால் இதனை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்துகிறது. நாங்களும் இதற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.

'கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பது போல்' இவர்களது இந்த அறிவிப்பு இருக்கிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம். தேர்தல் நெருங்குகின்ற காரணத்தால் இதனை அறிவித்துள்ளனர். இப்பொழுது வேண்டாம் அடுத்த ஐந்தாண்டுகளில் வைத்துக் கொள்ளலாம் என நாங்கள் கூறினோம். ஆனால் வழக்கம் போல் எங்களுடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை.

எங்களுடைய தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என கூறி இருந்தார். அதனால் நாங்களும் இந்த 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதலை அளித்துள்ளோம்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் 7 ஸ்டார் விடுதி போல் இருக்கிறதே தவிர, அதில் பழைய கட்டட பொலிவும் இல்லை; பழைய சிறப்புகளும் இல்லை. அது வேறு கதை. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இயற்றப்பட்டு இருக்கின்ற இந்த சட்டம் பெண்களுக்கு பொலிவு தருவது போல் இருக்கலாம்; ஆனால் பயன் இல்லை. " என்றார்.

Also Read: “நீட் ஜீரோ என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டு விட்டது..” : தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சனம் !