Tamilnadu

” 75 ஆண்டுகள் கழகம் செழிப்போடு இருக்க கோடிக்கணக்கான தொண்டர்களே காரணம்” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்றது.

இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது,அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது, பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''நான் சாமான்யன் - மிகமிகச் சாமான்யன். எனக்கடுத்த தளநாயகர்கள் எத்தனை பேர் வேண்டும்? இதோ எண்ணிக் கொள்!" - என்று சொல்லி தனது தம்பிமார்கள் பட்டாளத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கொட்டும் மழையில் பிறந்ததால் - உடனே வளர்ந்தது கழகம். இன்று பவளவிழா காண்கிறது.

ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது என்பது சாதாரணமானது அல்ல. பெரிய பெரிய தலைவர்கள் உருவாக்கிய இயக்கமெல்லாம் அவர்கள் மறைந்தபோது - அவர்களோடு சேர்ந்து மறைந்த எத்தனையோ வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம்.

ஆனால் தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ - அதே இளமையோடு - அதே வேகத்தோடு - அதே விவேகத்தோடு - அதே உழைப்போடு - அதே உணர்வோடு இன்று வரை - இந்த 75 ஆவது ஆண்டிலும் கழகம் செழிப்போடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் - கோடிக்கணக்கான கழகத் தொண்டர்கள் தான் இதற்குக் காரணம்.

இந்த வேலூர் கோட்டை முதல் முதல் - குமரிக் கடல் வரைக்கும் இக்கழகத்தைக் கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள் தான். உங்கள் அனைவரையும் தம்பிகளே என்று அழைத்தார் அண்ணா. உடன்பிறப்பே என்று விளித்தார் கலைஞர். நான் உங்களில் ஒருவன். நான் வேறு - நீங்கள் வேறல்ல. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாகவும் -தொண்டர்களால் முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டவன் நான். நான் உங்களில் ஒருவன். நான் வேறு - நீங்கள் வேறல்ல. உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். தொண்டர்களால் தலைவனாகவும் -தொண்டர்களால் முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டவன் நான். கழகத்தின் எந்தப் பொறுப்புக்கும் ஆசைப்படாமல் - அதிகாரத்தின் எந்தப் பதவியையும் அனுபவிக்காமல் - கருப்புச் சிவப்புக் கொடியைப் பிடித்திருந்தால் போதும் -கருப்பு சிவப்பு வேட்டியைக் கட்டியிருந்தால் போதும் - என்ற உணர்வோடு உயிர்வாழும் தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன்.

நீங்களும் - உங்கள் குடும்பமும் சேர்ந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் இயக்கம் தான் இப்போது பவள விழா கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறது. எந்தக் கட்டடமும் கட்டப்படும் முன் எடுத்து வைக்கப்படுவது செங்கல் தான். ஆனால் அது திறப்பு விழாவின் போது வெளியில் தெரியாது. மலர் மாலைகள் தான் தெரியும். மாலைகள் உதிர்ந்து விடும்.

ஆனால் செங்கல்கள் தான் கடைசி வரையிலும் காப்பாற்றும். அத்தகைய அடித்தளம் தான் கழகத்தின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள். அடித்தளத்தை நானும் மறக்க மாட்டேன். யாரும் மறந்து விடக் கூடாது. அதனால் தான் மூத்தமுன்னோடிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புச் செய்து கொண்டே இருக்கிறோம். ஒரு குடும்பத்துக்கு தாய் - தகப்பனைப் போன்றவர்கள் தான் ஒரு இயக்கத்துக்கு மூத்த முன்னோடிகள். அவர்களை இந்த பவள விழா ஆண்டில் போற்றுங்கள் - பாராட்டுங்கள் என்று அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களது கடந்த காலத் தொண்டுக்கு இணையாக நாம் எதையும் கொடுத்துவிட முடியாது. அவர்களை பாராட்டுவதன் மூலமாக நாம் நன்றிக்குரியவர்களாக ஆகிறோம். அவர்களை பாராட்டுவதன் மூலமாக நமது மதிப்பு உயரும் என்பதை மறந்துவிடாதீர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன தளநாயகர்கள் அவர்கள் தான். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன ரத்த நாளங்கள் அவர்கள் தான். இவர்களைப் பார்த்து புதிய புதிய தளநாயகர்கள் உருவாக வேண்டும்.

உருவாக்க வேண்டும் . இரண்டு கோடி உறுப்பினர்கள் இன்று இயக்கத்தில் இருக்கிறார்கள். இரண்டு கோடிப் பேர் என்ற எண்ணிக்கை தேவையில்லை.இரண்டு கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திராவிட முன்னேற்றக் கழகம். இதைவிட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்? இது கனவுகள் நிறைவேறும் காலம். அதனால் தான் நான் கம்பீரமாக நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் - மனநிறைவுடன் நிற்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவரியாகவும் - முகமாகவும் இருப்பவர்கள் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர். பாவேந்தர் பாரதிதாசன். இனமானப் பேராசிரியர் ஆகிய ஐவரும் ஆவார்கள். இவர்கள் தனிமனிதர்கள் அல்ல, தத்துவத்தின் அடையாளங்கள். தந்தை பெரியாரின் சமூகநீதியும் பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமையும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் உரிமையும் பாவேந்தரின் மொழிப்பற்றும் இனமானப் பேராசிரியரின் இனமானமும் தான் நம்மை வழிநடத்துகிறது.

அவர்களது கொள்கையை நாம் பின்பற்றுவதும் - அவர்கள் வழிநடக்கும் தளகர்த்தர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருதுகள் வழங்குவதும் நமது இயக்கத்தின் மாபெரும் கடமையாகும். இந்த ஐம்பெரும் ஆளுமைகளின் பெயரால் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டுக்கான பெரியார் விருது கி.சத்திய சீலன் அவர்களுக்கும் - அண்ணா விருது முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவர்களுக்கும் கலைஞர் விருது இன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி அவர்களுக்கும் பாவேந்தர் விருது மிலிகா கதிரவன் அவர்களுக்கும் பேராசிரியர் விருது ந.ராமசாமி அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்ற ஐந்து பேரையும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மக்களுடன் ஸ்டாலின்” : தி.மு.க முப்பெரும் விழாவில் செயலி வெளியீடு : அதன் 5 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ!