Tamilnadu

நிபா வைரஸ்.. தமிழ்நாட்டில் 6 மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்த சூழ்நிலையில் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கோழிக்கோட்டுப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கேரளாவை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் இருக்கக் கேரள எல்லைப் பகுதியைக் கொண்ட 6 மாவட்டங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழியாக வரும் பயணிகளுக்கு ஆய்வு செய்த பின்னரே தமிழ்நாட்டுப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர் காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தொற்று இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை : தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.. முழு விவரம் !