Tamilnadu

எதிர்கால ஆதாரம் : கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்ட முழு விவரம்.. 2வது புத்தகம் வெளியீடு !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துக்கள் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார்.

நமது பண்பாட்டுச் சின்னங்களாக திகழும் திருக்கோயில்களை மேம்படுத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை புனரமைத்தல், குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வாதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில் சொத்துக்களை அளவீடு செய்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 167 திருக்கோயில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.05.2022 அன்று வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து, 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்களின் விவரம். தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது புத்தகத்தை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று வெளியிட்டார்.

பின்னர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, இந்த புத்தகத்தில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த புத்தகத்தில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1.692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின்போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம் உள்ளது.

மேலும் கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 திருக்கோயில்களுக்கு சொந்தமான 1.434.43 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவியான DGPS மூலம் 74514.48 ஏக்கர் திருக்கோயில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

இந்நூல்கள் எதிர்காலத்தில் திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும். திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக, கடந்த 07.05.2021 முதல் 07.09.2023 வரை 653 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5.171 கோடி மதிப்பீட்டிலான 5.721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான DGPS மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன" என்றார்.

Also Read: சனாதனம் : “நா கோயிலுக்கு வெளியே இருந்தே பூஜை செய்தேன்..” - கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிர்வு !