Tamilnadu

“நா வரமாட்டேன்.. என்னய Arrest பண்ணாதீங்க சார்”:போலிஸார் முன் கதறி அழுத இந்து சேனா பிரமுகர் -நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்து சேனா நிர்வாகிகள் 3 பேர் கொண்ட கும்பல் வந்து, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது இவர்கள் மேற்கு மாவட்டத்தில் இருந்து வந்துள்ளதால், கல்லூரி நிர்வாகம் நிதி கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் உடனே கலாட்டாவில் ஈடுபட்டனர். அதோடு "நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.. நரேந்திர மோடியின் கட்சிக்காரர்கள். எங்களுக்கு நீங்கள் டொனேஷன் தரவேண்டும்" என கூறி தகராறு செய்தனர். அப்போது அவர்களைக் கல்லூரி நிர்வாகத்தினர் சமாதானம் செய்ய முயன்றபோதும், மூன்று பேரும் கத்தி கூச்சலிட்டுக் கொண்டு மிரட்டினர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இதனால் இந்து சேனா அமைப்பினர் கத்திகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் வடசேரி போலீசார் இந்துசேனா தலைவரான பிரதீப்குமார் (எ) மணிகண்டன் (40), பிரதீஷ் (36), மூர்த்தி (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்த சூழலில் அந்த கும்பலில் ஒருவரான பிரதீஷை (36) போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி பிரதீஷை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே அவரை நாகர்கோவிலில் அமைந்துள்ள சப் ஜெயிலில் அடைக்க போலீசார் கூட்டி சென்றனர். அப்போது சிறை வாசலுக்கு சென்ற பின்னர், தான் சிறைக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து அழுதுள்ளார் பிரதீஷ்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சமாதான படுத்தி உள்ளே கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் செல்ல மாட்டேன் என்று விடாப்பிடியாக அழுது தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார். இதனால் வேறு வழியின்றி பிரதேஷை போலீசார் கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் ஜெயில் முன் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: சகோதரரிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பாஜக நிர்வாகி மகன் உட்பட 10 பேர் கைது.. ரக்ஷாபந்தன் தினத்தில் ஷாக்!