Tamilnadu

”என்னுடைய அடுத்த இலக்கு இதுதான்”.. சென்னை விமான நிலையத்தில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பேட்டி!

அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இவர் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார்.

இந்த இறுதிப்போட்டி மூன்று சுற்றுகளாக நடக்க இருந்தது. ஆனால் முதல் இரண்டு சுற்றிலுமே கார்ல்சன் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். இருப்பினும் இந்த இரண்டு சுற்றுகளிலுமே உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தா கடும் நெருக்கடி கொடுத்தே தோல்வியடைந்தார். இந்த தொடரில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் இந்த வெற்றியுடன் இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்ஞானந்தா, "சென்னை விமான நிலையத்தில் எனக்கு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

உலகக் கோப்பை செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் உடன் செஸ் விளையாட்டு குறித்து அதிகம் கலந்துரையாடினேன். உலகக் கோப்பை செஸ்ட் தொடரில் தங்கம் வெல்லாதது வருத்தம் தான்.ஆனால் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி. சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்கிறேன்" என தெரிவித்துள்ளார்

Also Read: வரலாற்றில் இடம்பிடித்த நீரஜ் சோப்ரா.. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தல் !