Tamilnadu

சென்னையில் நடு ரோட்டில் பற்றி எரிந்த விலை உயர்ந்த BMW கார்.. பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!

சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி விலை உயர்ந்த BMW காரை பார்த்தசாரதி என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். இவர் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது.

உடனே பார்த்தசாரதி காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து இவர் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பதறியடித்து ஓடியுள்ளனர்.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தாம்பரம் சானடோரியம் தீயணைப்புத் துறைக்கும் மற்றும் போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சுதீப் ஸ்டைலில் மாணவர்களுக்கு முடி வெட்ட வேண்டாம்.. சலூன் கடைக்கு கடிதம் எழுதிய அரசு பள்ளி HM ! - காரணம்?