Tamilnadu

காவல் உதவி ஆய்வாளருக்கு நீதிமன்ற வளாகத்தில் கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலிஸ் !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் திருப்பத்தூர் மாவட்ட பாஜக இளைஞரணி துணை அமைப்பளாராக உள்ளார். பாஜகவில் இருக்கும் வினோத் கடந்த 2016 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை ஆலங்காயம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெகநாதன் என்பவர் கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது வரை நடைபெற்று வந்த நிலையில், நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதில் குற்றவாளி வினோத் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியாக ஜெகநாதன் சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே வினோத், உதவி ஆய்வாளர் ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி வினோத் குறித்து உதவி ஆய்வாளர் ஜெகநாதன் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த ஜூன் 27-ம் தேதி நிம்மியம்பட்டு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் காரை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத், ஆலங்காயம் காவல் நிலையத்தில் அதற்கான நிபந்தனை ஜாமீனில் கையொழுத்திட்டு வந்தார். அதன்படி இன்றும் காவல் நிலையத்தில் கையொழுத்திட்டு வெளியே வந்த போது திருப்பத்தூர் நகர காவல்துறையினர் வினோத்தை கைது செய்தனர்.

Also Read: மணிப்பூர் கொடூரம்.. ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.. எங்கு, எப்போது? - முழு விவரம் !