Tamilnadu

"உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் கட்சி என்றால் அது பா.ஜ.க தான்".. TKS இளங்கோவன் ஆசேவம்!

அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் பொன்முடி சிறிதும் கவலைப்படவில்லை. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், "பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கண்டு பா.ஜ.கவிற்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் ஏதாவது ஒரு வகையில் தி.மு.கவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என பா.ஜ.க முடிவு செய்து அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது.

நேற்றை அமலாக்துறையினர் நடத்திய சோதனை என்பது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்ப நடத்தப்பட்ட நாடகம் ஒன்று. பா.ஜ.கவினர் 36 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். தற்போது 37 ஆவது கட்சியாக அமலாக்கத் துறையைச் சேர்த்துக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் பொன்முடி சிறிதும் கவலைப்படவில்லை. அவருக்கு இந்த வழக்கு குறித்துத் தெரியும். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி என்றால் அது பா.ஜ.கதான். எதிர்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.கவிற்கு பணம் எங்கிருந்து வருகிறது?.

பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் கூட்டத்தைப் பற்றியும் அதன் முடிவுகள் குறித்தும் பொது மக்களுக்குத் தெரியாமல் இருக்கவே அமலாக்கத் துறையை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மக்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டார்கள் பா.ஜ.கவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் அமலாக்கத்துறையின் சோதனை என்று.

பா.ஜ.கவும் கங்கை நதியும் ஒன்றுதான். கங்கை நதியில் குளித்து விட்டால் அவர்கள் பாவம் தொலைந்து விடும் என்பார்கள். தற்போது பா.ஜ.கவில் சேர்ந்து விட்டால் அவர்கள் ஊழலற்ற கட்சியாக மாறிவிடுவார்கள். கங்கையில் எவ்வளவு அழுக்கு உள்ளதோ அதே அளவிற்கு பா.ஜ.கவிலும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.4,800 கோடி முறைகேடு.. EPS மீது புதிதாக வழக்கு தொடர தி.மு.கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!