Tamilnadu

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. - கலந்தாய்வு எங்கே, எப்போது ? - முழு விவரம் !

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் ,7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

தொடர்ந்து பேட்டியளித்த அவர், 2023-2024 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6,326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1,768. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 66 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், நெக்ஸ்ட் தேர்வு கூடாது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

20ம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்றார்.

7.5% உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெறும். பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்ற திட்டம் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

Also Read: தகைசால் தமிழர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!