Tamilnadu

தகைசால் தமிழர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய திரு.சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தகைசால் தமிழர்" என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.

இன்று 102 வது பிறந்த நாள் காணும் பெரியவர் சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான திரு சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

அதன் அடிப்படையில், மரியாதைக்குரிய சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்த நம் அருமைத் தோழர் என்.சங்கரய்யா, படிப்பை தியாகம் செய்து சுதந்திர போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றார்.

அவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு பெருமகிழ்ச்சி தருகிறது. நன்றியும் பாராட்டுக்களும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”புத்தகத்தில் உலகைப் படிப்போம்.. உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!