Tamilnadu

தோண்டத் தோண்ட ஆச்சரியம்.. கீழடியில் தங்க ஆபரணம் மற்றும் காளை உருவ பொம்மை கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ம் ஆண்டு முதல் 8 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது.

மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும் கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிலையில் தற்போது கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் தொடங்கி இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் நான்கு குழிகளில் ஒழுங்கற்ற தரைதளம் வெளிப்பட்டதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டு மற்ற குழிகளில் நடந்து வந்தன.

இதில் காது குத்தும் கம்பி போன்ற ஆபரணம், சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவம், விலங்கு உருவ பொம்மை, செப்பு கம்பி, கண்ணாடி மணிகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இதுவரை கீழடியில் 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Also Read: ”உழவர்களுக்கு விரோத அரசு ஒன்றிய பா.ஜ.க அரசு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!