Tamilnadu

அண்ணாமலைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் !

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் கொடுக்கமால் துன்புறுத்தியதால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இருதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவருக்கு அண்மையில் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலமாக இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையினருக்கு, அவர்களை ஏவிய ஒன்றிய அரசுக்கும் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த சூழலில் அமலாக்கத் துறையினரால் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் இருந்து தற்போது கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தனது கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தன் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே அண்ணாமலை பேசி வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை முறையாக பரிசீலிக்காமல் அவரை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்றும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கூடுதல் மனுவில் மேகலா சுட்டிக்காட்டி உள்ளார்

Also Read: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: “தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை..” அமைச்சர் சேகர் பாபு !