Tamilnadu

”ஜனநாயக போர்க்களத்தில் தளபதியாக இருந்தவர் கலைஞர்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 15ம் தேதி சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவாரூர் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் கோட்டத்தைல் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய தாயார் பெயரிலான தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. என் தந்தைக்கு என்னுடைய தாயார் கட்டிய கோட்டமாகவே இதனை பார்க்கிறேன்.

1971 முதல் இந்தியாவில் நடந்த அத்தனை அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். இந்திரா காந்தி தொடங்கி அத்தனை இந்திய பிரதமர்களுடனும் நல்லுறவு வைத்திருந்தார். ஆட்சி மாற்றத்திலும் பிரதமர்களை உருவாக்கியதிலும் கலைஞரின் பங்கு பெரும் பங்காக இருந்தது. சஞ்சீவ ரெட்டி முதல் பிரதீபா பாட்டில் வரை எல்லா குடியரசுத் தலைவர்களிடமும் நட்பு பாராட்டியவர்.

கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் அதிகமாக வந்துள்ளனர். அந்த வகையில் இந்திய அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பை ஏற்று, அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியை பீகார் தொடங்கி இருக்கிறது. "ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ" என்று சொன்னவர் தலைவர் கலைஞர். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பிவரும் காட்டுத்தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உங்கள் அன்புடன் நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக இருந்துள்ளார்.

பாஜகவை தோற்கடிக்காவிட்டால் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்நாடே இல்லாமல் போய் விடும்! இந்த சர்வாதிகாரத்தை நாம் எதிர்க்காவிட்டால் வேறு யாராலும் எதிர்க்க முடியாது. இதற்கு மேலும் பாஜகவை ஆளவிட்டால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமே கேடு" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”சமூக நீதியை நிலைநாட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்”.. பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி புகழாரம்!