Tamilnadu

வீடு புகுந்து அராஜகம்.. தட்டி கேட்ட வாலிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய அதிமுக நிர்வாகி கைது !

சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (30). இவரது தெருவில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களில் சில வாலிபர்கள் வேகமாக வந்துள்ளனர். இப்படி அடிக்கடி நிகழ்ந்ததால் எரிச்சலடைந்த பச்சையப்பன், அவர்களிடம் இப்படி ஏன் செயகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதிமுக வட்ட செயலாளர் கந்தராஜ்

மேலும் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறு செய்வது தவறு என்று தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த அதிமுக 30 வது வட்ட கழக செயலாளர் கந்தராஜ் (34) பச்சயப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கந்தராஜ், தனது உறவினர் கார்த்திக் (26) என்பவரையும் கூட்டி வந்து சண்டையிட்டுள்ளார்.

உறவினர் கார்த்திக்

இந்த சண்டையில் அதிமுக நிர்வாகிகள், பச்சையப்பனிடம் அத்துமீறியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் தங்கள் பதவியை வைத்து அவரை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே இருந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி கந்தராஜ் மற்றும் கார்த்திக், தங்கள் வீட்டுக்கு சென்று அங்கிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு, அதனை வைத்து பச்சயப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பச்சையப்பனை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பச்சையப்பன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவுஸ் செய்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், அதிமுக வட்டச் செயலாளர் கந்தராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Also Read: #FactCheck: ஒடிசா ரயில் விபத்து குறித்து அவதூறு.. வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்ட பாஜக பிரமுகர் கைது !