Tamilnadu

மகனுக்கு பெண் பார்க்க சென்ற பெற்றோர்.. குறுக்கே வந்த சரக்கு வாகனம்: அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்ட அள்ளி பாரத கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர்கள் முடிவு செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து பல இடங்களில் வரன்தேடி வந்தனர். இந்நிலையில் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காகக் கணவன் மனைவி இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் மணிகண்டன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் தங்கையுடன் சென்றார்.

பின்னர் இவர்களது இருசக்கர வாகனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பெற்றோர்கள் வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பச்சையப்பன், பாப்பாத்தி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனுக்குப் பெண் பார்ப்பதற்காகச் சென்றபோது சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: என்னை விட தம்பியிடம் அதிக பாசம் காட்டுவதால் கொன்றேன்.. - மகளின் வாக்குமூலத்தால் அதிர்ந்த பெற்றோர் !