Tamilnadu

”இந்திய அரசியலின் ராஜதந்திரி முத்தமிழறிஞர் கலைஞர்”.. கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கோபாலகிருஷ்ண காந்தி, "அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கலைஞர் பக்குவமானவர். ஆட்சியில் நிதானம் மற்றும் சமநிலை. எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். அரசியலில் அவர் இரும்பு தொழிலாளி. இந்திய அரசியலின் ராஜதந்திரி.

நம்முடைய முதலமைச்சர் பல பட்டியல்களைப் பார்த்துப் பல யோசனைகளைக் கேட்டு என்னைப் போல் அரசியலில் ஆனா ஆவன்னா தெரியாத ஒருவனை அழைத்துள்ளார். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் குடிமைப் பணியில் சேர்ந்தேன்.

நான் கோவிலுக்குச் செல்வதில்லை. கலைஞரின் இடத்தில் உண்மையைப் பேச வேண்டும். தற்போது இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. இந்தியாவின் தலைவிதியை மாற்ற இன்றைய இளம் அரசியல் வாதிகளை நான் கேட்டுக்கொள்வது, எங்களுடைய பொதுவாழ்க்கை வளம் பெறச் செய்ய வேண்டும் என்பதுதான். பொதுச் சொத்துகளை அறக்கட்டளை சொத்து போலக் காக்க வேண்டும்‌" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் நமது வாழ்நாள் கடமை”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!