Tamilnadu

”தமிழ் பற்றி எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளரும் அண்ணாமலை”.. அமைச்சர் பொன்முடி தாக்கு!

தமிழ் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை அரசியல் காரணங்களுக்காக வாய்க்கு வந்ததைப் பேசி வருகிறார் என அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என சுற்றறிக்கை வெளிவந்தது. இது குறித்து எனக்கோ, உயர் கல்வித்துறை செயலாளருக்கோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பு வந்த உடனே அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். பிறகு அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டது.

தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டு இருப்பதுதான் திராவிட மாடல்ஆட்சி. ஆனால் இதுபற்றி எல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

அவருக்குத் தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழர் வரலாறு பற்றியும் தெரியாது. எதுவும் தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை இப்படிப் பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஆசிய நாடுகளின் நுழைவாயில் சென்னை”: ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!