Tamilnadu

லாரி சக்கரத்தில் சிக்கிய மனைவி.. சாலையில் கணவன் கண் எதிரே நடந்த கொடூர சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார் பாளையம் ஊராட்சி கோங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு லோகேஷ் என்ற மகனும், லோகிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கபிலன் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எம்.எச் சாலையில் நாகராஜா கண்டிகை பகுதியில் எதிரே வந்த லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலிஸார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து உடற்கூறு ஆய்விற்காக அமுதாவின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிக்கலில் எடப்பாடியின் பினாமி.. அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.. அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலிஸார் !