Tamilnadu

விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : 4 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்.. DGP சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு !

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (வயது 50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர்.

சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற இந்த 6 பேரும் மயங்கி விழுந்தனர். இவர்களை மீட்ட உறவினர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்தனர். அப்போது கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகைவாசன், சுரேஷ், ராஜமூர்த்தி ஆகிய 5 பேரை மீட்ட போலீசார், போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர். இந்த சூழலில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேல், சங்கர், ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இன்று காலை டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு எக்கியார்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எக்கியர்குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்ற வியாபாரி அமரன், ஆறுமுகம், முத்து உள்ளிட்ட10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் புதுச்சேரியில் உள்ள பிம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Also Read: நீலகிரி TO விழுப்புரம்: 5 ஊர்களில் 6 திருமணம்.. பணம்,நகைகளை சுருட்டி ஏமாற்றி வந்த பெண் பிடிபட்டது எப்படி?