Tamilnadu

’டி.ஆர்.பி ராஜா எனும் நான்’... இன்று அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா!

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதோடு தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து மே 7ம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாகப் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்றது.

பின்னர் கடந்த ஆண்டு முதல்முறையாக அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கப்பட்டது. சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இன்று பதவியேற்றார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்.என்.ரவி, டி.ஆர்.பி ராஜாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி ராஜா அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து டி.ஆர்.பி ராஜா மேடையில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: இதுதான் திராவிட மாடல்.. அரைகுறை ஆய்வாளர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் பாடம் எடுத்த முரசொலி!