Tamilnadu

அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா.. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று வெளியானது முக்கிய அறிவிப்பு !

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதோடு தி.மு.க தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்றது.

அதன்பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தி.மு.க அமைச்சரவை முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் சில அமைச்சர்களுக்கு இலாக்காக்களும் மாற்றி அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆளுநர் மாளிகையில் வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து நாசரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read: பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை