Tamilnadu

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு : ரூ.11 கோடி வசூல்.. சென்னை மாநகரப் போக்குவரத்து போலிசார் தகவல் !

சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும்.

எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து, அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை.

இதனால் பல ஆயிர குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 10 அழைப்பு மையங்களில் 893 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 92,23,000/ வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து போலிசார், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மட்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கியது தொடர்பாக, 698 வழக்குகள் பதிந்து, ரூ. 72.30 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 10,832 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.11,20,95,000 (11 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரம்) வசூலிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

அதோடு இன்னும், 8,206 வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் உள்ளதாகவும், அவர்களிடம் இருந்தும் விரைவில் அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

Also Read: வரலாற்றில் முதல்முறை.. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் காரணமாக அரசு பள்ளியில் சேர குவிந்த விண்ணப்பங்கள் !