Tamilnadu
”முதுகெலும்பற்ற அண்ணாமலைகள்”.. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! தமிழர்கள் ஏமாளிகள் அல்லர்; நடக்கவிருக்கும் தேர்தலில் சரியான பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு:
கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை, ஊழல் புகார் கூறப்பட்டு பதவி விலகிய மேனாள் கருநாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.
அதில் (அது பெரிதும் தமிழர்கள் வாழும் பகுதி உள்ளடக்கம்) என்ன காரணத்தினாலோ என்னவோ முதலில் தமிழ் மொழி வணக்கப் பாடல் மேடையில் ஒலிபரப்பப்பட்டு, எல்லோரும் எழுந்து நின்று இருந்த நிலையில், அதை ஈஸ்வரப்பா கடுமையாக எச்சரித்துத் தடுத்து, கருநாடக தாய் மொழி வணக்கம் பாடும்படிக் கூறியதால், தமிழ் வணக்கப் பாட்டை நிறுத்திவிட்டனர்.
பா.ஜ.க. அண்ணாமலை ‘மவுன சாமியார்’ ஆனது ஏன்?
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘தமிழ்க் காக்கும் தனித்தலைவர்’ என்று பல நேரங்களில் தம்பட்டம் அடித்து, ‘‘தமிழ்ப்பால் அருந்திய’’ அண்ணாமலை, மேடையில் ‘மவுன சாமியாராக’ காட்சியளித்துள்ளார்! ‘துகில் உறிந்த துச்சாதனின் செயலை’ மவுனமாக இருந்து வேடிக்கைப் பார்த்ததாகக் கூறும் ‘பாண்டவர்களின்’ பாரதக் கதை காட்சிபோல நின்றுள்ளார்!
அதைவிடக் கொடுமை, அதனை நியாயப்படுத்திட முயன்று, முகத்தில் முரண்பாடுகள் என்ற கரியை அவரே பூசிக்கொண்டு தன்னைத் தாழ்த்திக் கொண்டும் உள்ளார்!
‘‘முதலில் பாடவேண்டியது கன்னடம்‘’ என்று ஒரு விளக்கம் - பிறகு, ‘‘ஒலிபரப்பப்பட்ட தமிழ் வணக்கப் பாட்டு சரியாகப் பதிவாகாததால் நிறுத்தப்படவேண்டியதாயிற்று’’ என்று மற்றொரு விசித்திர முரண்பாட்டு விளக்கத்தைக் கூறியுள்ளார்!
என்னே முரண்பாட்டின் மொத்த உருவம்!
ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் வணக்கப் பாட்டுத் தவறுதலாக முதலில் போடப்பட்டதாக வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், அது முடியும்வரை காத்திருந்து, பிறகு அல்லவா அதைச் சுட்டிக்காட்டி, கன்னடப் பாட்டு ஒலிபரப்பப்பட்டிருந்தால், அது அவை நாகரிகம் - பண்பாடு!
அதை விடுத்து, ஆவேசமாகத் துள்ளிக் குதித்தபடி ‘தூய்மையாளர்’ ஈஸ்வரப்பா தடுத்து நிறுத்தியபொழுது, ஒரு சிறு மறுப்போ, விளக்கமோகூட கூற முதுகெலும்பற்ற அண்ணாமலைகள் ‘‘குதிரை கீழே தள்ளியதோடு, குழியும் பறித்த கதைபோல’’ விளக்கம் வேறு கூறி, தன்னைக் கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் ஏமாளிகளா?
தமிழ்மொழியை அவமானப்படுத்தி, அங்கு வாழும் தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை அள்ளிட நினைத்தால், அங்குள்ள தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? அட அரசியல் கோமாளிகளே, பதில் கூறுவீர்களா? வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
பா.ஜ.க.வின் செயற்கையான ‘தமிழ் ஒப்பனை’ இதன்மூலம் நன்கு கலைக்கப்பட்டு விட்டது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ராகுல் காந்தி கேள்விக்கு 24 மணி நேரமாக மவுனம் காப்பது ஏன்? : மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!
-
ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!
-
தடுப்பூசி விவகாரம் - சொந்தநாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க : அகிலேஷ் குற்றச்சாட்டு!
-
தொடரும் மோசடி - ”நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” : தி.மு.க MP பி.வில்சன் வலியுறுத்தல்!
-
ஒருநாளுக்கு முன்பே 20 மாணவர்களுக்கு விடையுடன் நீட் வினாத்தாள் கசிவு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!