Tamilnadu

சிறுவனின் காதுக்குள் புகுந்த தேனீ.. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்கள்.. வேலூரில் என்ன நடந்தது ?

கோடை விடுமுறை தொடங்கியதும் வீட்டில் உள்ள சிறுவர்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். விளையாட செல்லவும், ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் செய்யும்போது அவர்கள் சில நேரங்களில் ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அண்மையில் கூட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா என்ற பள்ளி மாணவர்கள், திடீரென்று தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் குறித்த செய்திகளும் வெளிவந்த வண்ணமாக காணப்படுகிறது.

அந்த வகையில் நேற்று நண்பர்களுடன் தேன் எடுக்க சென்ற சிறுவனின் காதுக்குள் தேனீ புகுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமம் உள்ளது. இங்கு சில இளைஞர்கள் நேற்று மாலை நேரத்தில் தேன் எடுக்க தீப்பந்தத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தேன் கூடு கலையவே, தேனீக்கள் படையெடுத்து அந்த இளைஞர்களை விரட்டி கொட்டியுள்ளது. இதில் மோகன் பாபு என்ற 10-ம் வகுப்பு மாணவன், ராஜேஷ் என்ற இளைஞர் உட்பட 3 பேரை துரத்தி துரத்தி தேனீக்கள் கொட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே சோதித்தபோது, சிறுவன் மோகன் பாபுவின் காதுக்குள் தேனீ ஒன்று இருந்துள்ளது. பின்னர் அவரது காதுக்குள் இருந்த தேனீயை அங்கிருந்த மருத்துவர்கள் உயிருடன் வெளியே எடுத்தனர். இதில் சிறுவன் வலியால் அலறி துடித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மற்ற 2 சிறுவர்களுக்கும் தலையில் தேனீக்கள் கொட்டியதால், அவர்களுக்கு மொட்டையடித்து தலையில் இருந்த கொடுக்குகளை மருத்துவர்கள் அகற்றினர்.

தேன் எடுக்க சென்றபோது, தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் சிறுவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் சிறுவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read: தெரு ஓரத்தில் உணவின்றி உயிருக்கு போராடிய மூதாட்டி.. மீட்டு மருத்துவமனையில் சேர்த்த SP: குவியும் பாராட்டு!