Tamilnadu

மீன்பிடிக்க ஆற்றில் வீசப்பட்ட வெடி மருந்து தோட்டா.. குளித்துக்கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் அப்பகுதி மக்கள் வெடி மருந்து தோட்டாவை வீசி மீன்களை பிடித்து விற்பனை செய்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த வாலிபர்கள் மோகன் குமார் மற்றும் பூபதி ஆகிய இருவரும் ஆணை புலிகாடு பகுதியிலுள்ள தனது உறவினர் மாதையன் என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீன் பிடிப்பதற்காக அங்கு வந்த பெருமாள் என்பவர் வெடி மருந்து தோட்டாவை காவிரி ஆற்றில் வீசியபோது தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த மோகன்குமார் வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாறை மீது நின்றுக்கொண்டிருந்த பூபதி தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, உடனடிய பூலாம்பட்டி போலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிமருந்து தோட்டாவை வீசிய பெருமாளிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிப்பதற்காக போடப்பட்ட வெடிமருந்து தோட்டாவில் வாலிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.