Tamilnadu

அரசு குளிர்சாதனப் பேருந்துகளில் கட்டணம் உயர்வா?. அமைச்சர் சிவசங்கர் விளக்கம் என்ன?

அரசு குளிர்சாதன விரைவுப் பேருந்துகளில் வார நாட்களில் வழங்கப்பட்டுவந்த 10% கட்டணச் சலுவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நேற்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அரசு குளிர்சாதன விரைவுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்தள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "அரசு விரைவு குளிர்சாதனப் பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரை, வழக்கமாக 10 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சலுகை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொருந்தாது. இந்த நடைமுறை 2018-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதன்படி, தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை காலம் என்பதால், ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். சலுகை மட்டுமே ரத்தாகி உள்ளது. கட்டண உயர்வு எதுவும் அமலாகவில்லை" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் விளக்கத்தை அடுத்து நேற்று வெளியான தகவல் தவறானது என்று உறுதியாகியுள்ளது.

Also Read: கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு.. முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!