Tamilnadu

சென்னையில் 'சுதந்திர தின அருங்காட்சியகம்'.. பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. தமிழ்நாட்டின் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும் அவற்றை வளர்க்கவும் 200 அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கலைப் பயிற்றிகள் ரூ.1.70 கோடியில் வழங்கப்படும்.

2. சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகளில் தவில் மற்றும் நாதசுரம் பிரிவுகளில் ரூ.18 லட்சம் செலவில் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

3. சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடியே மூன்று புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் ரூ.20.92 கோடி செலவில் கட்டப்படும்.

4. கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் ரூ.1.97 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

5. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் 20 கூடுதல் சவகர்சிறுவர் மன்றங்கள் ரூ.58 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.

6. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திரையரங்கம் ரூ.50 லட்சம் செலவில் நவீனமுறையில் மேம்படுத்தப்படும்.

7. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கலைப்படைப்புகள் ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்படும்.

8. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக கலாச்சாரப் பரிமாற்றத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.

9. தமிழ்நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் நல்கைத் தொகையினை உயர்த்திடவும், அலுவலகத்திற்கான தளவாடங்கள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்திடவும் ரூ.1.09 கோடி ஒதுக்கப்படும்.

10. சென்னை அரசு அருங்காட்சியகத்தின் வளர்க்கலைக் கூடம், மானுடவியல் கூடம், சிறுவர் அருங்காட்சியகம் மற்றும் பாந்தியன் கட்டடங்கள் ரூ.10 கோடியில் பழுதுபார்த்து சீரமைக்கப்படும்.

11. அனைத்து அருங்காட்சியகங்களிலும் உள்ள சேகரிப்புகளை பட்டியலிடுவதற்கு தனிப் பயனாக்கப்பட்ட மென்பொருள் அருங்காட்சியக தகவல் அமைப்பு ரூ.1.5 கோடியில் உருவாக்கப்படும்.

12. வேலூர் அரசு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கான வசதிகளுடன் நவீன காட்சிமைப்பு மற்றும் ஊடாடும் தொழில்நுட்பங்களுடன் ரூ.1 கோடியில் மேம்படுத்தப்படும்.

13. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பப் பூங்கா மற்றும் விலங்கியல் காட்சிகள் கூடங்கள் ரூ.50 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.

14. கடலூர் அரசு அருங்காட்சியகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் காட்சியமைப்பு முறைகள் நவீன முறையில் ரூ.50 இலட்டத்தில் மேம்படுத்தப்படும்.

15. சென்னை ஹீமாயுன் மகால் பாரம்பரிய கட்டத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

16. தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று நிலவரைபடத் தொகுதி தயாரிக்கும் பணிகள் ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்படும்.

17. பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமும் சுற்றுலாத் தலமுமாகிய மதுரை திருமலை நாயக்கர் அரண் மனையில் வேலி மற்றும் புல்வெளித்தளம் அமைக்கும் பணிகள் ரூ.68.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

Also Read: சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை.. அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட 22 புதிய அறிவிப்புகள் என்ன?