Tamilnadu

ஏர்போர்ட்→மயிலாப்பூர்→ பண்ணை வீடு: ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் சாட்சியம் அளித்த வாரிசுகள் - பகீர் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் ஆடிட்டர் ஶ்ரீகாந்த் (60) என்பவர் தனது மனைவி அனுராதா (55) வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்த்துவிட்டு, 07.05.2022 அன்று அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.

ஶ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம், நெமிலிச்சேரில் உள்ள பண்ணை வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் சர்மா என்பவரின் மகன் கிருஷ்ணா என்பவர், சென்னை விமான நிலையத்திலிருந்து ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை காரில் அழைத்து வர சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சஸ்வத் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, ஶ்ரீகாந்த் சென்னை விமான நிலையம் வந்து இறங்கிவிட்டதாகவும், தங்களை அழைத்து செல்ல கார் ஓட்டுநர் கிருஷ்ணா வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

இந்நிலையில் சஸ்வத் மீண்டும் காலை 8.30 மணியளவில் தனது பெற்றோரை தொடர்பு கொண்ட போது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவர, உடனே கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது, இருவரும் வீட்டில் தூங்குவதாகவும் அவர்கள் எழுந்த பிறகு தகவல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

சஸ்வத் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது கிருஷ்ணா முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். சந்தேகமடைந்த சஸ்வத் தனது உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

உடனே ரமேஷ் பரமேஸ்வரன் தனது நண்பர் ஶ்ரீநாத் என்பவருடன் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஶ்ரீகாந்த் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கதவை யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில் லாக்கரிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயுள்ளதும் தெரிய வந்துள்ளது.

ராய் , கிருஷ்ணா

மேலும் வீடு சந்தேகத்திற்கிடமாக டெட்டாலால் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த இன்னோவா காரும் காணாமல் போயிருப்பதும் தெரியவர சந்தேகமடைந்த ரமேஷ் பரமேஸ்வரன், கார் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகமடைந்து இது குறித்து E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கிருஷ்ணா மற்றும் காணாமல் போன காரை தேடிவந்தனர்.

மேற்படி வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தனர். போலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளி தமிழகத்தை விட்டு நேபாளம் தப்பி ஓடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.

காவல் உயரதிகாரிகள், ஆந்திர மாநில போலிஸாரை தொடர்பு கொண்டு துல்லியாமாக இருப்பிடத்தை தெரிவித்ததன் பேரில் ஆந்திரா மாநிலம், ஒங்கோல் போலிஸார் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவரை இன்னோவா காருடன் மடக்கிப்பிடித்து சென்னை போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் குமரகுருபரன் தலைமையிலான காவல் குழுவினர் ஒங்கோலுக்கு விரைந்து சென்று பிடிபட்ட கிருஷ்ணா மற்றும் ரவியை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

மயிலாப்பூர் போலிஸார் 1.கிருஷ்ணா (எ) பதம்லால் கிருஷ்ணா (45) மற்றும் அவரது நண்பர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 2.ரவி (39) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டு ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரையும் மயிலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளதும், பின்னர் பிரேதங்களை காரில் ஏற்றி இறந்து போன ஶ்ரீகாந்துக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் அருகில் நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் புதைத்து விட்டு காரில் தப்பியதாக தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 1,139 சவரன் தங்க நகைகள், 53 கேரட் வைர நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் கொலை கூட்டுச்சதி உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.ஆனந்த் முன் சாட்சி விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி வருகிறார்.

நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமெரிக்காவில் இருந்த ஆடிட்டரின் மகன் சஸ்வத், மகள் சுனந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளியிலான 200க்கும் மேற்பட்ட பொருட்களை பார்வையிட்டு உறுதி செய்தனர். அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வதற்காக வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read: ஆடிட்டர் தம்பதி கடத்தி கொலை: 5 மணிநேரத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த போலிஸ்.. விசாரணையில் பகீர் தகவல்!