Tamilnadu

பர்த்டே பார்ட்டியில் அடித்து விளையாடிய நண்பர்கள்: கழுத்து நரம்பு அறுந்து சுயநினைவை இழந்த மருத்துவ மாணவர்!

சென்னையை சேர்ந்தவர் சபீக் அகமது. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அருகே உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி சபீக் அகமதுவின் பிறந்த நாளை கல்லூரியின் விடுதியில் நண்பர்களுடன் கொண்டாட முடிவெடுத்துள்ளார். அதன்படி, அன்று இரவு கேக் வெட்டிய பிறகு, நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது சபீக் அகமதுவின் நண்பர்கள் சிலர் விளையாட்டாக அவரை கீழே தள்ளிவிட்டு, ஒருவர் பின் ஒருவராக சபீக் அகமது மீது விழுந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் விளையாட்டு விபரீதம் ஆனதைக்கூட உணராத நண்பர்கள், தொடர்ந்து விளையாடியதில் சபீக் அகமது திடீரென மயக்கம் அடைந்து, பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த நண்பர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்காததால், அச்சமடைந்த நண்பர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு உயர்சிகிச்சை அளிக்கவேண்டும் என அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, சபீக் அகமதுவின் கழுத்துப் பகுதியிலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய நரம்பில் அதிக பாதிப்பு ஏற்பட்டதால் அவர் நினைவாற்றலை இழந்து, சுயநினைவை அடைந்துள்ளார் என்றும் அவருக்கு தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில் 4 மாணவர்களை 3 மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து கல்லூரி டீன் ராஜிஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டி.எஸ்.பி தமிழரசி தலைமையில் குருபரப்பள்ளி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவம்.. ஹெலிகாப்டர் குண்டுவீச்சில் 100-கும் மேற்பட்டோர் பலி!