Tamilnadu

உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த இளம் பெண்: ஏர்போர்ட் ஊழியர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்m ஜெயந்தன் கடந்த மார்ச் 18ந் தேதி மதியம் நங்கநல்லூர் சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்றபிறகு, பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், ஓரிரு நாட்களில் திரும்பி வராததால் அவருடைய சகோதரி ஜெயந்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஜெயந்தன் சகோதரி பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தனது சகோதார் ஜெயந்தனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். பழவந்தாங்கல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜெயந்தனின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில், புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி இடத்தினை செல்போன் சிக்னல் காட்டியது.

இதையடுத்து தனிப்படை போலிஸார் கடந்த 01ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை போலிஸார் பிடித்து விசாரணை நடத்தியதில், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார்.

பின்னர் போலிஸார் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில், ஜெயந்தன் திருமணம் செய்யும்படி தகராறு செய்ததால் கொலை செய்து விட்டதாகவும், உடலை துண்டு துண்டாக வெட்டி மாதம் 20ம் மற்றும் 26ம் தேதிகளில் கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து கொண்டுவந்து, செங்கல்பட்டு கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாக போலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதற்கு உடந்தையாக புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் இருந்ததாகவும் தெரியவந்தது. மேலும் போலிஸாரிடம் பாக்கியலட்சுமி கூறுகையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த தன்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதலில் சந்தித்தார்.

அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து தன்னை ஜெயந்தன் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் 2021ம் ஆண்டில் பிரிந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த மாதம் 19ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து தனி படை போலிஸார் பாக்கியலட்சுமியை கைது பழவந்தாங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். ஜெயந்தன் உடலை புதைத்த இடத்தினை பாக்கியலட்சுமி அடையாளம் காட்டுவதாக கூறியுள்ளதால் திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் ஜெயந்தன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தினை தோண்டி எடுக்க இருப்பதாக போலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஜெயந்தன் கொலை செய்யபபட்டதாக கூறப்படும் இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் மாவட்ட போலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜெயந்தன் குடும்பம் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கிரிக்கெட்டில் NO- BALL கொடுத்த நடுவர்.. ஆத்திரத்தில் நடுவரை மட்டையால் அடித்து கொலை செய்த Fielding அணி !