Tamilnadu

வழுக்கை தலையை ‘விக்’ வைத்து திருமணம்.. கேள்வி கேட்ட புது மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. நடந்தது என்ன ?

தாம்பரம் அருகே இருக்கும் சோமங்கலத்தை அடுத்துள்ள அமரம்பேடு என்ற கிராமத்தில் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவருக்கும் லோகப்பிரியா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியதால், பெண் வீட்டார் அதிகமான வரதட்சணை கொடுத்துள்ளனர்.

குறிப்பாக பெண்ணுக்கு 30 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 6 சவரன் நகை, கார் வாங்க ரொக்க பணம், சீர் வரிசை என அடுக்கடுக்காக கொடுத்துள்ளனர். இருப்பினும் திருமணம் முடிந்த பிறகு மேலும் வரதட்சணை வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கோகுலகண்ணன், அவரது தாய் ராஜேஸ்வரி லோகப்பிரியாவை கொடுமை படுத்தியுள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 2-ம் தேதி லோகப்பிரியாவை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோருக்கு மாப்பிள்ளை வீட்டார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பதறியடித்து வந்த பெற்றோர் அவரது சடலத்தை மீட்டதுடன் போலீசாருக்கும் தகவம் கொடுத்தனர். அதோடு தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி புகாரும் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கோகுலகண்ணனுக்கு முன்பு பல இடங்களில் பெண் பார்த்துவந்துள்ளனர். ஆனால் அவருக்கு வழுக்கை தலை இருப்பதாக கூறி பெண் கொடுக்க பலரும் மறுத்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து தனது தலைக்கு விக் வாங்கி மாட்டியுள்ளார். இதையடுத்துதான் லோகப்பிரியா குடும்பத்தாரை சந்தித்துள்ளனர். அவர்களும் மாப்பிள்ளை ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர்.

ஆனால் கோகுலகண்ணனோ தான் ஐடியில் பணிபுரிவதாக கூறி ஏமாற்றியுள்ளார். இப்படியே தொடர்ந்து சில மாதங்கள் கழியவே ஒருமுறை கோகுலகண்ணன் தலையில் முடி இல்லாததை லோகப்பிரியா பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த லோகப்பிரியாவை, உடனே அவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். மேலும் ஏன் பொய் சொல்லி திருமணம் செய்தீர்கள் என்றும் கேட்டு சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டையில் ஆத்திரமடைந்த கோகுலகண்ணன் அவரை அடித்தே கொன்றுள்ளார். இதையடுத்து இதனை மறைக்க கோகுலகண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி, தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவையனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்ததால் கேள்வி கேட்ட மனைவியை கணவரே அடித்து கொன்று தற்கொலை நாடகம் நடத்தியுள்ள சம்பவத்தில் கணவர் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Also Read: Escalatorல எப்படி ஏறணும் டீச்சர்.. கைப்பிடித்து கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்: சென்னையில் நடந்த சுவாரசியம்