Tamilnadu

பெண்ணை தாக்கி தங்க செயின் பறிப்பு.. இளைஞர்களை 4 மணி நேரத்தில் விரைந்து பிடித்த போலிஸ்: குவியும் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சாரூர் கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். சுரேஷ் இவரது மனைவி சுனிதா. சுனிதா தினமும் காலை - மாலை வேளைகளில் ஆற்றூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் கொண்டுவிட்டு அழைத்துவருவது வழக்கம்

அந்த வகையில் நேற்று மாலையில் தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துவர ஸ்கூட்டியில் சென்றுள்ளார் சுனிதா. அப்போது அவர் மூவாற்றுமுகம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்மநபர்கள் சுனிதாவின் கழுத்தில் இருந்த 7சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதில் வாகனம் ஒட்டிக்கொண்டிருந்த சுனிதா நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் மருத்துவமனைக்கு வந்த திருவட்டார் போலிசார் சம்பவம் குறித்து சுனிதாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் நடந்தவற்றை கூறினார்.

இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு சென்ற அதிகாரிகள், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் மூன்று பேர் முககவசம் அணிந்து பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் குறித்து விசாரிக்கையில் கொள்ளையர்கள் மூன்றுபேரும் நாகர்கோவில் பகுதியிலுள்ள கடையொன்றில் கொள்ளையடித்த நகையை விற்க முயன்றனர்.

அப்போது அங்கே சென்ற அதிகாரிகள், அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் குளச்சல் உடையார்விளையை சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகன் நித்தீஷ்ராஜா (22), செம்மாம்விளை அருகே ஓலக்கோடு பகுதியை சேர்ந்த குமாரதாஸ் என்பவரது மகன் பிரேம்தாஸ் (23) மற்றும் வழுக்கம்பாறை மணவிளை பகுதியை சேர்த்த சவுந்தர் என்பவரது மகன் விக்னேஷ் (20) என்பதும் தெரியவந்தது.

மேலும் செலவுக்கு பணம் தேவைபட்டதால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், முன்பு இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை நான்கு மணி நேரங்களிலேயே விரைந்து செயல்பட்டு கைது செய்த காவல்துறையினரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர்.. கொசுவர்த்தியால் நேர்ந்த விபரீதம்.. டெல்லியில் பெரும் சோகம் !