Tamilnadu

சிறப்பாக செயல்படும் காலை உணவு திட்டம்.. பொறுத்துக்கொள்ள முடியாமல் குறை கூறும் பழனிசாமி: அமைச்சர் பதிலடி!

எந்த தொண்டு நிறுவனத்தின் உதவி இல்லாமல் சிறப்பாக காலை உணவு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை அரசின் மீது தேவையில்லாமல் குறை கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், "சட்டப்பேரவையின் கூட்டத்தின்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பத்திலேயே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விழுப்புரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார். குடும்ப பிரச்சனையின் காரணமாக நடைபெற்ற அந்த சம்பவத்திற்கு காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பிறகும் கூட தொடர்ச்சியாக ஏதோ அந்த 2 திமுகவை சேர்ந்தவர்கள் அணிந்திருந்த சட்டையில் முதல்வர் படம் இருந்ததை கூறி அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறி, கஞ்சா நடமாட்டம் தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டிருக்கிறது என்கின்ற வகையில் செய்தியாளர் சந்திப்பிலே தெரிவித்திருந்தார்.

கஞ்சாவும் போதை வஸ்துக்களான குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துக்களும் கூடுதலாக இருந்தது, கட்டுக்கடங்காமல் இருந்ததும் யார் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலை இருந்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பாதுகாப்பாக சொல்லும் போதும், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சொல்லும்போதும் கஞ்சா விற்பனை தாரளமாக கிடைக்கிறது என்கின்றார்.

அவர்களிடத்தில் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை கஞ்சா விற்பனை என்பது எங்கே இருக்கிறது என்ற தகவலை சொன்னால் அந்த கஞ்சாவை காவல்துறையினர் மூலம் அழித்தொழிப்பதற்கும் சம்பந்தபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் சரியாக இருக்கும். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் கஞ்சா தமிழ்நாட்டில் உள்ளது என்றெல்லாம் சொல்லுவது, அவர் செய்யும் அரசியலுக்கு அழகல்ல.

அதிமுக ஆட்சியில், இந்த போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சென்னையில் அனைத்து கடைகளிலும் இந்த குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் மிக தாராளமாக கிடைக்கிறது என்று கூறி 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த போதை பொருட்களை கொண்டு வந்து சட்டமன்றத்திலேயே காட்டினோம். அப்போது உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால் சட்டப்பேரவை தலைவரிடத்தில் சொல்லி எதிர்கட்சித் தலைவர் சென்னையில் எந்தெந்த கடைகளில் போதை பொருட்களை வாங்கினார் என்ற விவரங்களை கேட்டுப்பெற்று, சம்பந்தபட்ட கடைகளில் விற்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் உண்மையான அக்கறை உள்ளவராக இருந்திருப்பார். ஆனால் இந்த தவறை சுட்டிக்காட்டிய அன்றைய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே அப்போது பார்த்தார்கள்.

நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருடனான கூட்டம் ஒன்றை நடத்தி அந்த கூட்டத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் இருந்த ஓட்டுமொத்த மாணவர்களையும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியினை அன்றைக்கு மிகச் சிறப்பாக எடுத்து செய்தார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்தும் இத்தகைய போதை பொருட்கள் தமிழ்நாட்டிற்கு வருவதை அறிந்து அப்போது தென்மாநில போலிசாருடனான கூட்டத்தில் ஆந்திராவில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை கூறி, அதில் 6000 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிரிடப்படுவது எடுத்துச் சொல்லப்பட்டது.

உடனடியாக ரூ.4000 கோடி மதிப்லான அந்த 6000 ஏக்கர் கஞ்சாப் பயிர் அழித்தொழிக்கப்பட்டது என்பது வரலாறு. இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் கூட கஞ்சா பயிர் வளர்க்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவினர் தங்களுக்கு யார் யாரை பிடிக்காதோ அவர்களுக்கு எதிராக கஞ்சா வழக்கை போடுவதை வாடிக்கையாக செய்பவர்கள்.

முன்னர் காமராஜரின் உதவியாளராக இருந்த வைரவன் மீதும் கஞ்சா வழக்கை போட்டவர்கள் தான் இன்றைய எதிர் கட்சியினர். அதனால் தான் இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் எந்த கெட்ட சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு கஞ்சா தான் காரணம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

காலை உணவு திட்டம் அரசு திட்டமாக எதிர்கட்சியினர் அவர்களது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை. அட்சய பாத்திரா என்கின்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.5 கோடி இந்த திட்டம் என்று குறிப்பிடமாமல் அரசின் சார்பில் தந்து, மாநகராட்சியின் இடத்தை தந்து அவர்கள் உணவு சமைப்பதற்கும் பறிமாறுவதற்குமான திட்டம் தொடங்கினார்கள்.

ஆனால் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசே எந்த தொண்டு நிறுவனத்தின் உதவி இல்லாமல் சிறப்பாக காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த அரசின் மீது தேவையில்லாமல் குறை கூறி வருகிறார். முன்னர் சர்.பி.டி. தியாகராயர் அவர்களால் சென்னை மாகானத்தில் ஒரு சில பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டதினை பின்னர் காமராஜர் அவர்களால் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர் அது டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது இதில் எந்த ஐயமும் இல்லை. அதன் பிறகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவு என்றால் உண்மையிலேய சத்துணவாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாரத்திற்கு 5 முட்டைகள் வரை ஏழை எளிய மக்களின் குழந்தைகள் சாப்பிடும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தினார்.

“காலை உணவு திட்டம்” என்று குறிப்பிட்டாலே நம்முடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரே நம்முடைய நினைவுக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: புதிதாக தரம் உயரும் 5 மாநகராட்சிகள்.. அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு: இதில் உங்க நகராட்சி இருக்கா?