Tamilnadu

கோயில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது.. 6 கிராம் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பறிமுதல் - போலிஸ் அதிரடி!

சென்னை, திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் அதே பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நிர்வாக தலைவராக உள்ளார். சித்தி விநாயகர் கோயிலில் கடந்த 3 வருடங்களாக குமார் என்பவர் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக குமார் அர்ச்சகர் பணிக்கு வராமலும், எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். எனவே சக்திவேல் கோயிலில் உள்ள தங்கநகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை சரிபார்த்தபோது, 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சக்திவேல், திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், மேற்படி கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் கோயில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில் காவல்குழுவினர் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த குமார் திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி கோயிலில் திருடப்பட்ட 6 கிராம் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி குமார், விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: “கடைசி பிறந்தநாள் - உலகம் முழுவதும் வாழ்த்து அட்டை பெற்ற 5 வயது சிறுமி..” : பொற்றோர் சொன்ன சோக செய்தி!