Tamilnadu

“முரசொலியே தன்வீடு என அர்ப்பணித்து கொண்டவர்” : முன்னாள் மேலாளர் மறைவுக்கு முதல்வர் உருக்கத்துடன் இரங்கல்!

முரசொலி முன்னாள் மேலாளர் ராஜேந்திரன் நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து ராஜேந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ. கருணாநிதி ஆகியோர் உள்ளனர்.

இதனிடையடுத்து முரசொலி முன்னாள் மேலாளர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் , “தமிழினத் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியே தன் மூச்சென வாழ்ந்திட்ட, முரசொலி முன்னாள் மேலாளர் இராஜேந்திரன் அவர்கள் மறைந்த அதிர்ச்சியான செய்தி வந்தடைந்து வேதனையை தந்தது.

கூடுவிட்டுக் கூடு மாறும் பறவையாக இல்லாமல், முரசொலியே தன் வீடு எனத் தன்னை முரசொலிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். 1977-ஆம் ஆண்டு தலைவர் கலைஞரின் நிழலில் பயணித்திட வந்த அவர், தனது உழைப்பால் விநியோக மேலாளர், அலுவலக மேலாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, 2006-இல் முரசொலியின் பொது மேலாளராக ஆகி, 2021-இல் பணி ஓய்வுபெற்றார்.

பணி ஓய்வு பெற்றாலும் தன் குடும்பத்தினருடன் எப்போதும் முரசொலி நினவலைகளைப் பகிர்ந்துகொண்டிருந்த அவர், வயது மூப்பின் காரணமாக மூச்சை நிறுத்திக் கொண்டாரா அல்லது தன் உயிரோடு கலந்துவிட்ட முரசொலியை பணி ஓய்வுக்குப் பின் பிரிந்திருக்க முடியாமல் இதயத்துடிப்பை நிறுத்திக் கொண்டாரா என்றெண்ணி மனம் வெதும்புகிறது.

இராஜேந்திரன் அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் – நண்பர்கள் மற்றும் முரசொலி ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Also Read: 'இளையநிலா பொழிகிறதே'.. பாடலுக்கு கிடார் இசைத்த பிரபல கலைஞர் மரணம்.. இளையராஜா உள்ளிட்ட பலர் இரங்கல்!