Tamilnadu

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குடும்பம்.. 3 பேரை கைது செய்த போலிஸ்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக குருவம்மாள் உள்ளார். மேலும் பாரத் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரகதீஸின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி மற்றும் தாத்தா முனியசாமி ஆகியோர் நேற்று பள்ளிக்கு வந்துள்ளனர்.

அப்போது இவர்கள் ஆசிரியர் பாரத்திடம் 'எப்படி எங்களது குழந்தையை அடிக்கலாம்' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்கள் ஆசிரியரை தாக்கினர். இதைத் தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளை தள்ளிவிட்டுள்ளனர். இதில் அவர் கீழே விழுந்துள்ளார்.

மேலும், இவர்கள் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஆசிரியர் பாரத் வகுப்பறையை விட்டு வெளியேஒடிவந்துள்ளார். அப்போதும் அவர்கள் மூன்று பேரும் விடாமல் அவரை தாக்கியுள்ளனர். மேலும், பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலி மற்றும் புத்தகங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் காவல் நிலைய போலிஸார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவர் பிரகதீஸ் வீட்டுப்பாடம் சரியாகச் செய்யவில்லை என ஆசிரியர் பாரத் கண்டித்துள்ளார்.

அப்போது மாணவரின் தாத்தா முனியசாமி பள்ளிக்கு வந்து ஆசிரியர் பாரத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனது மகள் மற்றும் மருமகனுடன் வந்து ஆசிரியரைத் தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில், சிவலிங்கம், செல்வி, முனியசாமி ஆகிய 3 பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய பணிப்பெண்.. உடனிருந்த Driver.. - வெளியான பகீர் தகவல் !