Tamilnadu

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் ஸ்டாலின் ஜேக்கப்பின் உணர்ச்சி மிகுந்த புகைப்படங்கள்.. தொகுப்பு இதோ !

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (37). தமிழ்நாட்டில் பிரபலமான புகைப்பட கலைஞர்களில் ஒருவரான இவர், சிறந்த புகைப்பட கலைஞர் மட்டுமல்லாமல் திமுகவின் சமூக வலைதள பணியையும் மிக சிறப்பாக செய்து வந்தார். இவரது வேலை காரணமாக சென்னையிலே வசித்து வந்த இவர், 'What a Karwad' என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

மேலும் அவ்வப்போது நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவும் செய்து வந்தார். சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள் தற்போதும் நின்று பேசும். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த வகையில் இருக்கும்.

இந்த நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான விஷ்ணு என்பவருடன் சேர்ந்து ஒளிப்பதிவு செய்ய சென்ற அவர், நிகழ்ச்சி முடிந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கனரக வாகனம் இவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் நேற்றைய முன்தினம் தான் அவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை தொடர்ந்து இவருடன் பணிபுரிந்தவர்கள், கழக உறுப்பினர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழச்சி தங்க பாண்டியன் MP, கனிமொழி MP என பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் கலைஞர் இறுதி ஊர்வலத்தில் எடுத்த குறிப்பிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ !

Also Read: கழக செயல்வீரர், புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி இரங்கல் !