Tamilnadu

ஒட்டகத்தைப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த தொண்டர்.. ஆச்சரியத்துடன் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சென்னை, பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர், தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்தப்பெற்றார். பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அனைவரும் அவருக்குப் புத்தகங்கள், ஆடுகள் என பரிசுகொருட்களை வழங்கினர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஜாகிர்ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 வயதாகும் ஒட்டகத்தைப் பரிசாக அளித்தார்.

இது குறித்துப் பேசிய ஜாகிர்ஷா, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உயிர் பொருள்களைப் பரிசாக வழங்கி வருகிறேன். முதலில் ராஜ குதிரையை அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன். அதன்பிறகு ஜல்லிக்கட்டு காளை, வாஸ்து மீன், புறா, ஆடு என ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உயிர் பொருள்களைப் பரிசாகக் கொடுத்து வருகிறேன். இந்த பிறந்த நாளுக்கு உலகத்திலேயே யாரும் கொடுக்காத பரிசாக ஒட்டகத்தைக் கொடுத்து இருக்கிறேன். இந்த ஒட்டகத்திற்கு இரண்டு வயது. இதற்கு மருத்துவச் சான்றிதழ் எல்லாம் பெற்றிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை.. திராவிட தலைவருக்கு குவிந்து வரும் வாழ்த்துகள்: புகைப்படத் தொகுப்பு!