Tamilnadu

நேற்று மும்பை.. இன்று சென்னை : 2 நாளில் 2 IIT மாணவர்கள் தற்கொலை: ஒரு மாணவர் தற்கொலை முயற்சி!

மும்பை IIT-யில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் கடந்த 12ம் தேதி விடுதியின் மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் சென்னை IIT-யில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி ஆல்பட் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவன் சன்னி ஆல்பட். இவர் சென்னை IIT-யில் எலக்ட்ரிகல் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் IIT வளாகத்தில் உள்ள மகாநதி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீவன் சன்னி நேற்று இரவு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து சக மாணவர்கள் IIT நிர்வாகத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில் IIT நிர்வாகம் சார்பில் விடுதி மேலாளர் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் ஸ்ரீவன் சன்னி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலிஸார் முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

அதேபோல் IIT-யில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன் விவேஷ். நேற்று இரவு தான் தங்கியிருந்த மாத்தாங்கண்ணி விடுதி அறையில் அளவுக்கு அதிகமான மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடுதி அறையில் மயங்கிக் கிடந்த மாணவன் விவேஷை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒரே நாளில் ஒரு மாணவர் தற்கொலை மற்றும் ஒரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து பேராசிரியர்களின் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: “இது ஒரு நிறுவன படுகொலை..” சூடு பிடிக்கும் IIT முதலாமாண்டு மாணவரின் மர்ம மரணம்.. மும்பையில் அதிர்வலை !