Tamilnadu

வங்கியில் கொள்ளையடிக்க துப்பாக்கியோடு வந்த இளைஞர்.. துண்டை வைத்தே மடக்கி பிடித்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். பாலிடெக்னிக் மாணவரான இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து வெளியான துணிவு படத்தை பார்த்துள்ளார். பின்னர் அதே பாணியில் வங்கியில் கொள்ளை அடிக்க முடிவுசெய்துள்ளார்.

இதற்காக அதேபகுதியில் உள்ள கனரா வங்கியில் தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். பின்னர் இன்று காலை காலை 11 மணியளவில் வழக்கம்போல வங்கி செயல்பட்டு கொண்டிருந்தபோது திடிரென பர்தா அணிந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுரேஷ் அந்த வங்கிக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் தான் வங்கியை கொள்ளை அடிக்க வந்துள்ளதாகவும், என்னிடம் வெடிகுண்டுகளும் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் திகைத்து நின்க, அங்கிருந்த ஒருவர் தான் வைத்திருந்த துண்டை வைத்து சுரேஷை மடக்கி பிடித்தார்.

இதையடுத்து, வங்கி அதிகாரிகள்காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில், போலிஸார் விரைந்து வந்து சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடந்த சோதனையில் அவர் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் போலி என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து சுரேஷை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் துப்பாக்கியால் ஒருவர் வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Also Read: இனத்தால் பிரிந்த காதல்.. 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திப்பு.. 69 வயதில் காதலனை தேடி கரம்பிடித்த பெண்!